நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 3 டிசம்பர், 2025

பாவலர் சின்னமணல்மேடு த. இராமலிங்கம்

  

 சின்னமணல்மேடு  . இராமலிங்கம்


[சின்னமணல்மேடு  .  இராமலிங்கம் அவர்கள் தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  புதுவெள்ளம் இதழின் ஆசிரியர்; பன்னூலாசிரியர். மரபுப் பாடல் எழுதுவதில் வல்லவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தமிழக அரசின் பாடத்திட்டக் குழுக்களில் பணியாற்றியவர். வீராணம் ஏரிக்கரையில் உள்ள சின்ன மணல்மேடு என்னும் ஊரில் பிறந்தவர்.]


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிலிருந்து சேத்தியாத்தோப்பு வரை நீண்டு கிடப்பது  வீராணம் ஏரியாகும். முதலாம் பராந்தகசோழனின் இயற்பெயரான வீரநாராயணன் பெயரில் இவ்வேரி வீரநாராயணன் ஏரி என்று அழைக்கப்பெற்று, மக்கள் வழக்கில் இன்று வீராணம் ஏரி என்று குறைவுற்று வழங்குகின்றது. இப்பேரேரியின் நீர்வளத்தால் வாழைக்கொல்லை, கூளாப்பாடி, கந்தகுமரன், உத்தமசோழன் முதலான ஊர்களும் அதனைச் சுற்றியுள்ள பல நூறு ஊர்களும் வளம்பெற்றுத் திகழ்கின்றன. 

வீராணம் ஏரியின் நீர் வேளாண்மைக்கு இன்று உதவுவதுடன் சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் பணியையும் செய்கின்றது. அதுபோல் இந்த வீராணம் பகுதியில் தோன்றிய அறிஞர் பெருமக்கள் பலரும் இப்பகுதி மக்களுக்குக் கல்விபுகட்டும் பணியைச் செய்வதுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்குத் துணைநிற்பவர்களாகவும், தூண்களாகவும் விளங்குகின்றனர். 

அவ்வகையில் தமிழாசிரியராகப் பணியாற்றியும் புதுவெள்ளம் என்னும் இலக்கிய இதழ் நடத்தியும், திருக்குறளுக்கு உரைவரைந்தும் அறிவுப்பணியாற்றிவரும் பாவலர் சின்னமணல்மேடு த. இராமலிங்கம் அவர்களின் பணிகளைக் கருவூர்ப் பாவலர் அருணா பொன்னுசாமி அவர்கள் வழியாக அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன்.  அறிஞர்கள் போற்றும் கவிதையாற்றலைக் கைவரப்பெற்ற த. இராமலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை இலக்கிய ஏடுகளில் பதிவுசெய்யப்பெற வேண்டிய பான்மையை உடையது. அவர்தம் வாழ்க்கையையும் தமிழ்ப் பணிகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். 

த. இராமலிங்கம் அவர்கள் வீராணம் ஏரியால் வளம்பெற்றுத் திகழும் சின்னமணல்மேடு என்னும் ஊரில் வாழ்ந்த கோ. தம்புசாமி – அம்மாக்கண்ணு ஆகியோரின் மகனாக 20.10.1949 இல் பிறந்தவர். உழவர்குடியில் தோன்றிய த. இராமலிங்கம் தம் நான்காம் அகவையில் தந்தையாரை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். 

த. இராமலிங்கம் அவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சின்ன மணல்மேடு என்னும் தம் ஊரில் கல்வி பயின்றவர். தெ. நெடுஞ்சேரியில் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை பயின்றவர். காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் பள்ளியில் ஒன்பது முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர்.

  வடலூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று(1966-1968), இடைநிலை ஆசிரியராகக் கொள்ளுமேட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியொன்றில் 02.11.1968 ஆம் ஆண்டு முதல்  பன்னிரண்டரை ஆண்டுகள்  பணியாற்றியவர். 

1978 இல் தமிழக அரசும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து “பெரியார் என்னும் பேரொளி” என்னும் தலைப்பில் பாப் போட்டி நடத்தியது. அப் போட்டியில் கடலூர் மாவட்டத்தில் முதன்மை இடம் இவருக்குக் கிடைத்தது. இப்போட்டி'யின் முடிவு இவருக்கு, அடுத்த பணி உயர்வுக்கு ஆதரவாக இருந்தது. 

அரசுப் பணி கிடைத்து, சங்கராபுரத்தை அடுத்துள்ள பிரம்மகுண்டம் என்ற ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதனை அடுத்து, பண்ணுருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூரில் உள்ள அரசுப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1991 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பண்ணுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கடலூர் மாவட்டம் காரைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  முப்பத்தொன்பது ஆண்டுகள் மிகச் சீரும் சிறப்புமாகப் பணியாற்றிய த. இராமலிங்கம் வானொலிகளில் பேசியும், பல்வேறு இதழ்களில் எழுதியும் தம் படைப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தவர். தினமணி, தென்மொழி, தீக்கதிர் முதலான ஏடுகள் இவர்தம் படைப்புகளைத் தாங்கிவருவன. இவர்தம் மரபுப் பாடல்கள் மிகச் சிறந்த உணர்ச்சிப்பாக்களாக விளங்குவனவாகும். சிறுவர் பாடல் புனைவதிலும் பெரும் ஈடுபாடுகொண்டவர்.

. இராமலிங்கம் அவர்கள் 27.08.1972 இல் தம் இருபத்து நான்காம் அகவையில் புலவர் கு. சாவித்திரி அவர்களை இல்லறத் துணையாய் மணந்துகொண்டார். கு. சாவித்திரி அவர்களும் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் இரண்டு ஆண் மக்கள் வாய்த்தனர். முதல் மகன் மருத்துவர் இரா. இலெனின் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகின்றார். இரண்டாவது மகன் இரா. கபிலன் பொறியியல் பயின்று, முதுநிலை மேலாளராகப் மணியாற்றி வருகின்றார். 

. இராமலிங்கம் அவர்கள் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளராகப் பொறுப்பு வகித்தவர். மேலும் கடலூர் மாவட்டத்துப் பொருளாளர், செயலர், தலைவர் பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்படச் செயல்பட்டவர். 

புலவர் புங்கனேரியான் அவர்களை அமைப்பாளராகக் கொண்டு காட்டுமன்னார்கோவிலில் 1972 முதல் இயங்கிய பாவேந்தர் பைந்தமிழ் மன்றத்தின் தலைவர், செயலாளராகப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தியவர். தமிழகத்து அறிஞர்களை அழைத்து, திங்கள்தோறும் விழாக்களையும், ஆண்டு விழாக்களையும் நடத்தி அப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். 

. இராமலிங்கம் அவர்கள் புதுவெள்ளம் என்ற திங்களிதழின் ஆசிரியராக இருந்து, 2016 முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர். தமிழ்நாட்டரசின் சமச்சீர் கல்விப் பாடநூல் உருவாக்கும் குழுவில் பணியாற்றியவர். 

த. இராமலிங்கம் அவர்கள் அறிவாற்றலில் நிறைந்து நிற்பவர் என்பதுபோல் தம் வளர்ச்சியில் துணைநின்ற புலவர் சு. நஞ்சப்பன், புலவர் பூ. தில்லைவளவன், புலவர் ந. செல்வராசன், புலவர் துரை தில்லான் முதலான சான்றோர்களிடத்து மிகுந்த நன்றியுணர்வுகொண்டவராக விளங்குகின்றார்.

  த.இராமலிங்கம் அவர்களின் தமிழ் ஈடுபாட்டினை அறிந்த பல்வேறு தமிழமைப்புகள் இவருக்குப் பின்வரும் விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கிப் போற்றியுள்ளன. 

1.   மறைமலையடிகள் விருது

2.   பாவேந்தர் மரபுப் பாவலர் விருது

3.   யாப்புநூல் புரவலர்

4.   எழுச்சிப் பாவலர்

5.   நடைமுறைப் பாவலர்

6.   கவிதைக் கனல்

7.   கவியருவி

8.   தகைசால் தமிழ்ப்பணிச் செல்வர்,

9.   மரபு மாமணி 

முதலான விருதுகள் குறிப்பிடத்தக்கன. 

. இராமலிங்கம் அவர்கள் தற்பொழுது நெய்வேலி முதன்மை வாயிலுக்கு எதிரில் உள்ள அண்ணா கிராமத்தில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார். 

. இராமலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   சூரியனைச் சுடும் நெருப்பு (பாடல்)

2.   வள்ளுவத்தில் காதல் (பாடல்)

3.   கிணற்றில் வீழ்ந்த கடல் (பாடல்)

4.   பாவம் குருவிகள் (உரைநடை)

5.   திருக்குறள் தெளிவுரை 








 

நன்றி: புலவர் அருணா பொன்னுசாமி, கரூர் 

 

செவ்வாய், 2 டிசம்பர், 2025

புலவர் அருணா பொன்னுசாமி

  

புலவர் அருணா பொன்னுசாமி 

[புலவர் அருணா பொன்னுசாமி மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்று, பல்வேறு அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்னூலாசிரியர். திருக்குறளுக்கு உரைவளம் வரைந்தவர். கரூரில் பல்வேறு இலக்கியப் பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் செய்துவருபவர்.] 

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வுசெய்வதற்கு மாணவராக இணைந்தபொழுது (1993) முனைவர் கடவூர் மணிமாறனார் அவர்களை அவர்தம் கிருட்டினராயபுரம் இல்லம் சென்று சந்தித்து, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் குறித்து உரையாடினேன். அதுபொழுது பாவேந்தர் பாரதிதாசனார் வழியில் பாட்டெழுதும் பல கவிஞர்களைக் கடவூரார் எனக்கு அறிமுகம் செய்தார். அவ்வகையில் அன்றையப் பிற்பகலில் கரூர் சென்று கவிஞர் கன்னல், கவிஞர் அருணா பொன்னுசாமி, கவிஞர் நண்ணியூர் நாவரசன் முதலானவர்களைக் கண்டு உரையாடியமை பலவாண்டுகளுக்குப் பின்னரும் நெஞ்சில் நிழலாடும் நினைவுகளாக உள்ளன. அற்றைப்பொழுதில் அருணா பொன்னுசாமி அவர்களின் அன்பார்ந்த வரவேற்பும், அள்ளித் தந்த நூல்படிகளும், சொல்லி மகிழ்ந்த உவமைக்கவிஞர் சுரதாவின் நட்பும் இன்றும் என் மனத்துள் பதிந்துகிடக்கின்றன. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள அருணா பொன்னுசாமியாரின் தமிழ் வாழ்வை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். 

புலவர் அருணா பொன்னுசாமியாரின் தமிழ் வாழ்க்கை 

புலவர் அருணா பொன்னுசாமி அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையில் வாழ்ந்த . அருணாசலம் - அங்காயி அம்மாள் ஆகியோரின் மகனாக 04. 10. 1938 இல் பிறந்தவர். பெற்றோர் 8 முழம் சரிகை வேட்டி ஆயத்தம் செய்யும் பத்துத் தறிகளின் உரிமையாளர் ஆவர். 

தாத்தையங்கார்பேட்டை என்பது திருப்பதி – திருமலை இறைவனுக்குத் தீர்த்தகுடம் எடுத்துவந்து வழங்கும் ஐயங்கார் மரபினருக்கு  வல்வில் ஓரியால் இறையிலியாக வழங்கப்பட்ட ஊர் என்று அறியமுடிகின்றது. தாதா ஐயங்கார்பேட்டை என்பது தாத்தையங்கார்பேட்டை என மருவியதாகவும் தெரியவருகின்றது. இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் உள்ள முசிறியிலிருந்து 10 கல் தொலைவில் உள்ளது. 

புலவர் அருணா பொன்னுசாமி தம் பிறந்த ஊரான தாத்தையங்கார்பேட்டையில் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். நான்கு முதல் 7 ஆம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பயின்றவர்.  எட்டாம் வகுப்பு முதல் அவ்வூர் பள்ளி உயர்நிலைப் பள்ளியானதால் அங்குப் பயின்றவர். பின்னர் பள்ளியிறுதி வகுப்பில் 1956 இல் தேர்ச்சி பெற்றதும் 1957 முதல் 1961 வரை மயிலம் தமிழ்க் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் பயின்று பட்டம் பெற்றவர். 

துறையூரில் அமைந்துள்ள செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் 100 உருவா ஊதியத்தில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 1963 இல் குமாரபாளையத்தில் தமிழாசிரியர் பயிற்சி பெற்றவர். 1964 முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் இணைந்து, தமிழ்ப்பணியாற்றியவர். 

1965 ஆம் ஆண்டு தாத்தையங்கார்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றுப் பணியாற்றினார். மேலும் 1972 இல் குளித்தலை அருகில் உள்ள ஜி. உடையாப்பட்டிக்குப் பணிமாறுதலில் சென்று பணியாற்றியவர். 

புலவர் அருணா பொன்னுசாமி அவர்கள் அ. முத்துலட்சுமி அவர்களை 1972 இல் திருமணம் செய்துகொண்டவர். அ. முத்துலட்சுமி அவர்கள் புனித தெரசா தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர்களின் இல்லறப் பயனாய் இரேவதி, பாலாஜி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

கரூர் என். புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி அரசு மேனிலைப் பள்ளி முதலிய இடங்களில் அருணா பொன்னுசாமி தமிழாசிரியராகப் பணியாற்றி 1987 இல் பணியோய்வு பெற்றவர். தமிழ்ப்பற்றும் சுற்றம் சூழ வாழும் நல்லுள்ளமும் வாய்க்கப்பெற்ற அருணா பொன்னுசாமியார் கரூரின் முதன்மையாள இலக்கிய ஆளுமையாக விளங்கிவருகின்றார். 

புலவர் அருணா பொன்னுசாமி தம் வீட்டிலேயே நூலகம் அமைத்து மாவட்ட ஆட்சியரால் பாராட்டப் பெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் பொறுப்பேற்றுத் தமிழாசிரியர் நலனுக்குப் பாடுபட்டவர். 1968 இல் இலங்கைப் பயணம் மேற்கொண்டு 14 நாள்கள் தங்கி, ஆசிரியர் நிலைகள், பள்ளிகள் குறித்து அறிந்துவந்தவர். 1972 இல் திரு.வி.க. மன்றத்தைத் தொடங்கிப் பலரும் நூல் எழுதும் வகையில் ஊக்கப்படுத்தி வருபவர். 

புலவர் அருணா பொன்னுசாமி அவர்கள் திருக்குறளில் நல்ல ஈடுபாடு உடையவர். திருக்குறளுக்கு உரைவளம் என்னும் தலைப்பில் நூல் எழுதி முப்பதாயிரம் படிகளுக்கும் மேல் அச்சிட்டு, அனைவருக்கும் இலவயமாக வழங்கித் திருக்குறள் பரப்பும் பணியில் தம்மை இணைத்துக்கொண்டவர். இவர்தம் திருக்குறள் ஈடுபாட்டைப் போற்றும் வகையில் தமிழகத் தமிழாசிரியர் மாநாட்டில் மேனாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் இவருக்குத் “திருக்குறள் மாமணி விருது” அளித்துச் சிறப்பித்துள்ளார். இவர் இயற்றிய மூவேந்தர் காப்பியம் என்ற வரலாற்று நூல் புகழ்பெற்றது. பாவேந்தர் கவிதைகளில் ஈடுபாடுகொண்ட இவர் “பாட்டருவிப் பாவேந்தர்” என்னும் கவிதைப் படைப்பை இயற்றியுள்ளார்.

 புலவர் அருணா பொன்னுசாமி தம் உள்ளம் கவர்ந்த கவிஞரான உவமைக்கவிஞர் சுரதாவின் பெயரில் மரபுக்கவிதை இலவசப் பயிற்சிக்கூடம் நிறுவி, மரபுக்கவிதை எழுதும் பயிற்சியை வழங்கி, கரூரில் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றார். 

தாம் பயின்ற மயிலம் கல்லூரியின் மீதும் அதன் அதிபராக விளங்கிய பத்தொன்பதாம் பட்டம் குருமகா சந்நிதானங்களில் மீதும் அளவற்ற பற்றினைக் கொண்டவர். பத்தொன்பதாம் பட்டம் குருமகா சந்நிதானங்கள் அவர்களின் நூற்றாண்டினைத் தாம் வாழ்ந்துவரும் கரூரில் நடத்திப் பெரும் புகழ்பெற்றவர். 

புலவர் அருணா பொன்னுசாமியின் தமிழ்க்கொடை 

1.   பெண்மை வெல்க (1962)

2.   பாட்டருவிப் பாவேந்தர் (1990)

3.   தமிழில் பூத்த தாழம்பூ (1991)

4.   முப்பால் முத்து (1992)

5.   பொருண்மொழிக் காஞ்சி (1995)

6.   திருக்குறள் உரைவளம் (2001)

7.   தமிழர் திருமணம் (2002)

8.   முத்துக்குவியல் (2004)

9.   உறவுப்பூக்கள்( 2006)

10. அண்ணா ஆயிரம் (2008)

11. மணம் பரப்பும் மலர்கள்( 2011)

12. சமச்சீர் கல்வி - ஒரு பார்வை (2012)

13. ஒரு குறள் விளக்கம் (2013)

14. கனவும் கற்பனையும் – கடித இலக்கியம் (2013)

15. வெண்பா வேள்வி ( 2017)

16. தமிழனின் அடையாளம்( 2017)

17. கொல்லிமலைச் சித்தர்கள் (2022)

18. மூவேந்தர் காப்பியம் ( 2023)