பேராசிரியர் ம.இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு

>> வெள்ளி, 20 நவம்பர், 2009

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா எழுதிய சோளக்கொல்லைப் பொம்மை என்ற குழந்தைகளுக்கான பாடல் நூலின் வெளியீட்டு விழா புதுவையில் நடைபெற உள்ளது.

நாள்: 22.11.2009 ஞாயிறு
நேரம்: காலை 9 மணியளவில்
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடம்

நூல் வெளியீடு எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள்

நிகழ்ச்சியில் உருவா 100 விலை கொண்ட நூல் உருவா 80 விலைக்குக் கிடைக்கும்.

தொடர்புக்கு:
வானகப் பதிப்பகம்
7,11 ஆம் குறுக்கு,அவ்வை நகர்,
புதுச்சேரி-605 008
பேசி: +91 413 2252843

Read more...

நினைவில்லம் திறப்பு சில படங்கள்...

>> புதன், 18 நவம்பர், 2009

என் தந்தையார் கோ.சி.முருகேசன் அவர்களின் பெயரில் நினைவில்லம் திறக்கும் எண்ணம் பல மாதங்களுக்கு முன்பாகத் தோன்றி இன்று முழுமைபெற்றது.

ஆம்.எங்களின் முன்னோர்களால் சற்றொப்ப எண்பதாண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரின் தென்மேற்கில் இரண்டு கல் தொலைவில், இடைக்கட்டு என்ற ஊரில் மிகப்பெரிய வீடு ஒன்று கட்டப்பட்டது.அதற்கு முன்பு இடைக்கட்டு என்ற எங்கள் ஊரில் காளியம்மன்கோயில் அருகில் ஒரு பழைய வீடு இருந்தது.எம் முன்னோர்களுக்கு நில புலங்கள் மிகுதி.பொன்னேரி என்று இன்று அழைக்கப்படும் சோழகங்கம் முன்பு காடாக இருந்து, திருத்தப்பட்டு,நிலமாக இருந்தது.அதனை நிலமாகத் திருத்திப் பலவாண்டுகளாக எம் முன்னோர் பயன்படுத்தி வந்தனர்.

இந்தியத் தன்னுரிமைக் காலத்தில் ஆங்கிலேயர்கள் நிலத்தை ஏரியாக்கும் பொழுது பல நூறு ஏக்கர் இருந்த எங்கள் நிலம் அரசுக்குக் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டது.எம் முன்னோர்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் நேர் நின்று பேசும் ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தனர்.அவர்களின் துரைத்தனத்துக்கு முன்பாக உழவுத்தொழில் மேற்கொண்ட இவர்களால் வாதிட்டு நிலங்களைத் தங்களுக்கு உரிமையானதாக ஆக்க முடியவில்லை.மிகவும் குறைந்த விலைக்கு நிலத்தை விற்றனர்.அவ்வாறு விற்ற தொகையும் சிலருக்குப் பாகம் பிரிக்காததால் ஆங்கிலேய அதிகாரிகள் வங்கியில் அப்பணத்தை முதலீடு செய்தனர்.பங்கு பிரிந்த பிறகு பணத்தை எடுத்துக்கொள்ள வசதி செய்து தந்திருந்தனர்.ஆனால் கடைசி வரை பாகம் பிரியாமல் இருந்தது.அந்தப் பணம் என்ன ஆனது?எந்த வங்கியில் முதலீடு செய்யப்பட்டது என்ற விவரம் யாவும் தெரியவில்லை.

கோட்டை கட்டி நெல் குவித்த எம் முன்னோர்கள் வாழ்ந்த வீடு "கோட்டையான் வீடு" என்று இன்றும் அழைக்கப்படுகிறது.இந்த வீடு கட்டுவதற்குப் பல ஊர்களிலிருந்து மரம் வந்துள்ளது.64உத்திரம் அமைந்த வீடு.தேக்கு மரத்தால் அமைந்த சரங்கள் உள்ளன.ஓடு கவிழ்க்கும் சட்டம் தேக்குமரத்தில் இழைக்கப்படிருக்கும். பாலை மரத்தால் அமைந்த ஒத்த அளவுள்ள தூண்கள் எம் வீட்டில் இன்றும் காணப்படும்.இந்த மரங்கள் 5 கல் அருகில் உள்ள பெரியவளையம் என்ற ஊரிலிருந்து வந்துள்ளன.அந்த மரம் இருந்த கொல்லைகள் இன்றும் பாலைமரத்துக் கொல்லை எனப்படுகிறது.

மரம் விற்ற அந்த நில உரிமையாளரை அவர் வழி வந்தவர்கள் இன்றும் ஏசித் தீர்ப்பது உண்டு."கோட்டையான் வீட்டுக்கு மரத்தை வெட்டி வித்துப்புட்டு எங்களுக்கு ஒரு வீடு கட்டவில்லையே" என்று ஏசுவார்களாம்.

பாலை மரத்தில் சிறு கைத்தடிகள் செய்து வைத்திருந்தனராம்.அந்தக் கைத்தடிகள் இன்றும் இருப்பில் இருப்பதாக அறிந்தேன்.சில கைத்தடிகளைக் காவலர்கள் தங்கள் பாதுகாப்புக்கு எடுத்துச்சென்றதாகவும் அறிந்தேன்.அந்த மரம் விளைந்த இடங்களை அடையளம் காட்டும் ஆட்கள் உண்டு என்று அறிந்தேன்.அந்த அளவு அந்த வீடு கட்டப்பட்ட பல ஆவணங்களையும் தொகுக்கும் முயற்சியில் இருந்த நான் பலருக்கும் பங்குடைய அந்த வீட்டை விலைக்கு வாங்கிப் புதுப்பித்துப் பழைமை மாறாமல் காக்கும் பிடிவாதத்துடன் செயல்பட்டேன்.

ஓராண்டாகத் தீவிரம் கொண்ட என் முயற்சி நிறைவுபெற்றது.ஆம்.அந்த வீட்டைப் புதுப்பித்து இன்று என் தந்தையாரின் நினைவு நாளில் நினைவில்லமாகத் திறந்தோம்.இந்த நிகழ்ச்சிக்கு முனைவர் பொற்கோ ஐயா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.ஆனால் தவிர்க்க இயலாத காரணத்தால் ஐயாவால் இன்று வரமுடியா நிலை சொல்லிப் பின்னொரு நாள் வந்து அந்த இல்லில் ஒருநாள் தங்கி வருவதாக உறுதியுரைத்தார்கள்.அந்த வீட்டின் மேல் துணைவேந்தர் பொற்கோ ஐயா அவர்களுக்கு ஒரு பெரிய ஈடுபாடு உண்டு.என் விருப்பம் அறிந்து என் முயற்சியை ஐயா அவர்கள் ஊக்கப்படுத்திய வண்ணம் இருந்தார்கள்.அவர்களுக்கு நன்றியுடையேன்.

மிகப்பெரிய இடிபாடுகளுக்கு இடையில் இருந்த வீட்டைப் புதுப்பித்து மீட்டுள்ளோம்.இனியும் அழகுப்படுத்தும் சில பணிகள் உள்ளன.வண்ணம் பூசவேண்டும்.சில கூரை அமைப்புகள் அமைக்க வேண்டும்.யாவும் முடிந்த பிறகு எம் ஊரில் நடைபெறும் நல்ல நிகழ்வுகள், இலக்கியச்சந்திப்புகள்,அயல்நாட்டிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் சுற்றுலா வரும் அன்பர்கள் தங்கிச்செல்லும் வகையில் இதனை இன்னும் சில மாதங்களில் பல ஏந்துகளுடன் வடிவமைப்போம்.

இது நிற்க.

இன்று(18.11.2009) காலை 10.30 மணியளவில் நினைவில்லம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.உறவினர்கள் ஊர்ப்பெரியவர்கள்,நண்பர்கள் என நூற்றைம்பதுபேர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சிக்கு என் சிறிய தந்தையாரும் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவருமான திரு.காசி.அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.என் தமிழாசிரியர் திரு.கணேசமூர்த்தி ஐயா அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்கள்.சனதா பல்பொருள் அங்காடி உரிமையாளர் திரு.மாணிக்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். குருவாலப்பர்கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கி.முல்லைநாதன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார்கள்.

என் பாட்டனார் திரு.காசிநாதன் அவர்களும்(அகவை 90) என் பெரிய தந்தையார் திரு.சி.சாமிதுரை(அகவை 89) அவர்களும் நினைவில்லக் கல்வெட்டைத் திறந்துவைத்தனர்.திரு.சோ.குலோத்துங்கன்(வாழ்நாள் காப்பீட்டு அதிகாரி),திரு.சிறீகாந்து(தமிழாசிரியர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கட்டடப்பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு ஆடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.வந்திருந்த அனைவருக்கும் இன்னடிசில் வழங்கப்பட்டன.தந்தையாரின் நினைவுகளை ஏந்தியபடி புதுச்சேரி வந்துசேர்ந்தேன்.


புதுப்பிக்கப்பட்ட இல்ல முகப்பு


திரு.காசிநாதன் அவர்கள் கல்வெட்டு திறத்தல்


கல்வெட்டு திறக்கும் உறவினர்கள்


நினைவில்லத் திறப்புக்கு வந்திருந்த உறவினர்கள்,நண்பர்கள்


செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும் என் சிறிய தந்தையருமான திரு.காசி.அன்பழகன் அவர்கள் தலைமையுரையாற்றுதல்


ஊ.ம.தலைவர் திரு.முல்லைநாதன் அவர்களுக்குச் சிறப்பு செய்தல்


அழகுபடுத்தும் கைகளுக்குக் காத்திருக்கும் கலைநயம்மிக்க சுவர்


எங்களின் வீடு(பழைய படம்)

Read more...

எங்கள் வீடு எழுந்து நின்றது!

>> திங்கள், 16 நவம்பர், 2009



எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் வீடு கட்டப்பட்டது.என் தந்தையாரின் பாட்டனார் திரு.கோவிந்தனார் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட வீடு. என் தந்தையார் காலம் வரை சிறப்பாக இருந்தது.மிகப்பெரிய மக்கள் கூட்டம் வாழ்ந்த அந்த வீடு எனக்கு நினைவு தெரிந்த நாளில் இடியத் தொடங்கியது.கோவிந்தனார் அவர்களுக்கு இரு மனைவியர்.முதல் தாரத்துப் பிள்ளைகள் என் பாட்டனார் திரு.சிங்காரவேல் அவர்களும் திரு,பூராசாமி அவர்களும் ஆவர்.இரண்டாம் தாரத்தில் தோன்றியவர்கள் திரு.கந்தசாமி திரு.தருமலிங்கம் அவர்களும் ஆவர்.ஒவ்வொருவருக்கும் இரண்டு தாரங்கள் என்று பின்னாளிலும் மனைவிமார்கள் மிகுதி.எனவே மக்கட் செல்வத்திற்குக் குறைவில்லை.எங்கள் பாட்டி ஒருவர் பன்னிரண்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்.இப்படி மிகப்பெரிய குடும்பம் பின்னாளில் அனைத்து நிலைகளிலும் நலிந்தது.

எங்கள் வீடு இடிந்து விழுந்தது.பங்கு பிரியாமல் இருந்ததால் யாராலும் அதனைப் புதுப்பிக்க முடியாமல் போனது.என் தந்தையார் இறந்த சூழலில் ஊரில் உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடும் சூழல் அமைந்தது.அப்பொழுது வீடு புதுப்பித்தல் தொடர்பாகப் பேச்சு எழுந்தது. ஏறத்தாழ 35 ஆண்டுகளாக இந்தப் பேச்சு அலை அடிக்கடி எழும்பி இல்லாமல் போகும்.அப்படியே அந்தச் சுற்றுப் பேச்சும் நல்ல முடிவு எட்டாமல் முறிந்தது.

மீண்டும் ஒரு சூழலில் பேசி முடிப்பது என முடிவு செய்து ஒன்று கூடினோம்.ஆசாரியார் ஒருவர் வந்து விலை மதிப்பீடு செய்தார்.நியாயமான விலையாக அது இருந்தது.என்றாலும் அனைவரும் விலையை உயர்த்தியே பேசினோம்.எங்களுக்குள் ஒரு முடிவு செய்ய ஊர்ப்பெரியோர்கள் நினைத்தனர்.அதாவது இந்த வீடு பல பாகங்களாக இருப்பதால் யாராலும் சீர் செய்யமுடியவில்லை.எனவே பொதுவாக விலை பேசி ஒருவர் மட்டும் வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தனர்.அதாவது ஒருவரிடம் வீடு,மனையைக் கொடுத்துப்பணம் பெற்றுகொண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் வெளியேறி வேறு வீடுகள் கட்டிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி என்னை இந்த வீட்டை வாங்கிக்கொள்ள ஊரினர் வேண்டினர்.நானும் இசைந்தேன்.இங்குதான் கவனிக்க வேண்டும்.நான் பணியில் இருப்பதால் உறவினர் அனைவரும் கூடுதல் விலைக்கு என்னிடம் விற்க முனைந்தனர்.ஒரு வழியாக விலை பேசி என் பெயருக்கு வீடு,மனை யாவும் பதிவு செய்யப்பெற்றது.

வீடு வாங்கிய உடன் வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது.அதன்படி பொறியாளர் நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று காட்டினேன்.யாரும் அதனைப் புதுப்பிக்க ஒப்பவில்லை.இடித்துத்தள்ளிவிட்டு புதிய வீடு கட்டுவதற்கு அறிவுரை கூறினர்.அந்த அளவு பழையவீடு. சுவர் இடிந்து பாம்புகள்,பிற நச்சுயிரிகளின் கூடாரமாக இருந்தது.முதலில் இடிந்த பகுதிகளை 23.07.2009 முதல் இடித்து வெளியேற்றினோம்.

தருமபுரி பொறியாளர் நண்பர் திரு.நரசிம்மன் ஒருமுறை வந்து பார்த்து சில அறிவுரைகளை வழங்கினார்.உள்ளூர் நண்பர்களின் அறிவுரைப்படி 27.07.2009 இல் கால்கோள் நடந்தது.16.08.2009 முதல் கம்பி வேலை நடந்தது.இடிப்பதும் கட்டுவதும் எனப் பணி விரைவாக இருந்தாலும் மிகப்பெரிய வீட்டை இடித்து பழைமை மாறாமல் மீண்டும் கட்டுவது என்பது மிகப்பெரிய வேலையாகிவிட்டது.இதில் பலநாள் கட்டடம் கட்டும் கொத்தனார்,ஆசாரியார்,ஓடு மாத்துபவர்களின் ஒத்துழைப்பின்மை,மழை,என் பணிச்சூழல் எனக் காலம் நீண்டு ஒரளவு நிறைவு பெற்ற பொழுது என் தந்தையார் அவர்களின் நினைவு நாள் நெருங்கியது நினைவுக்கு வந்தது.

எனவே என் தந்தையாரின் நினைவு நாளில் அவரின் காலத்தில் கட்டி முடிக்கப்பெறாத வீட்டை எங்கள் உறவினர்கள்,நண்பர்களின் உதவியால் மீண்டும் நிலை நிறுத்தும் முயற்சிக்கு வெற்றி கிடைக்க உள்ளது.ஆம்.நாளை மறுநாள் 18.11.2009 எங்கள் இல்லம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது.முனைவர் பொற்கோ அவர்களின் திருக்கையால் திறக்கப்பட உள்ள எங்கள் இல்லத் திறப்பு நிகழ்ச்சியை இருந்த இடத்திலிருந்து வாழ்த்துங்கள்.இது பற்றி முன்பும் எழுதினேன். விரிவாகப் பின்பும் எழுதுவேன்.


இடிபாடுகளில் எங்கள் வீடு


பேணுதலின்றி ஆடுகள் அடைந்துகிடக்கும் திண்ணை


இடித்துக்கிடக்கும் காட்சி


புதிய சுவர்கள் உயர்தல்


புதிய பொலிவுக்கு முந்திய காட்சி

Read more...

பண்பறிந்து ஆற்றுக...

>> சனி, 14 நவம்பர், 2009

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்.அதன் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் வாழ்வில் பின்பற்றத்தக்கன.திருக்குறள் மேலோட்டமாக நோக்கும்பொழுது ஒரு பொருளைத் தெற்றென வெளிப்படுத்துவது போலவே ஆழ்ந்து நோக்கும்பொழுது ஆழ்ந்தபொருள் தரும் சிறப்பிற்கு உரியது.நான் வாழ்வில் மிகுதியாக எண்ணி எண்ணி வியந்த குறட்பா இதுவாகத்தான் இருக்கும்.அது இது:

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை(469)

திருவள்ளுவர் இக்குறளை யாது காரணமாக இயற்றியிருப்பினும் உரையாசிரியர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பொருளதிகாரப் பகுப்பில் அரசியல் என்னும் இயல் வகைக்குள் அடக்கி உரை வரைந்துள்ளனர்.அரசனுக்கு அறிவுரை கூறும் முகமாக அமையும் அரசியல் பகுதியில் இக்குறள் இருந்து, அரசனுக்கு உரியதாகக் காட்டப்பட்டாலும் உலகியல் மாந்தர் அனைவருக்கும் பொதுப்படையாக இந்தக் குறட்பா பொருந்துவதாக உள்ளது.இந்தக் குறட்பா வழியாகத் திருவள்ளுவ ஆசான் மாந்தர்களுடன் இணைந்து வாழும் பொழுது கவனமாக இருக்க வேண்டும், உறவு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.எவ்வளவு எச்சரிக்கையாக நாம் இருந்தாலும் நமக்குப் பகை,தொல்லை,உறவு அறுதல் ஏற்படுவது மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறை தெரியாததால்தான் ஆகும்.எனவே வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்தக் குறட்பா கருத்தை வாழ்வில் ஒருமுறையாவது எதிர்கொண்டிருப்பர்.

வாழ்க்கையில் அதிர்ச்சியையும், மன உலைச்சலையும் ஏற்படுத்தும் பல்வேறு சூழல்களில் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும் குறட்பாவாக இது இருக்கின்றது.இந்தக் குறட்பாவுக்கு உரையாசிரியர்களும் தமிழறிஞர்களும் பல்வேறு விளக்கங்களை வரைந்துள்ளனர். தேவைப்படுவோர் அந்த அந்த உரையாசிரியர்கள் வரைந்த உரைப் பகுதிகளைக் கற்றுச் சுவைக்கலாம்.

பரிமேலழகர் தம் உரையில் " வேற்று வேந்தர் மாட்டு நன்றான வுபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்.அவரவர் குணங்களையாராய்ந்து அவற்றிற்கியையச் செய்யாவிடின்" என்பார்.

நான்றான வுபாயமாவது-கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலுமாம்.அவை யாவர் கண்ணும் இனியாவதற் சிறப்புடைமையின்,உம்மை சிறப்பும்மை. அவற்றை அவரவர் பண்பறிந்தாற் றாமையாவது: அவற்றிற்கு உரியரல்லாதார்கண்ணே செய்தல்.தவறு-அவ்வினை முடியாமை.

நல்ல செயல்களைச் செய்தாலும்(கொடுத்தல்,இன்சொல் சொல்லல்) அவற்றை அவரவர் பண்பு அறிந்து செய்ய வேண்டும்.அவ்வாறு பண்பறியாமல் செய்தால் அச்செயல் நன்மைக்குப் பதிலாகத் தீமையை தந்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் எனவும்,'பண்பெனப்படுவது தன் கிளை அறிந்து ஒழுகல்'(கலி.133) எனவும் பிற நூலார் குறிப்பர்.

உலக வாழ்வில் பன்முகத்தன்மை கொண்ட மாந்தர்களை நாம் காண்கின்றோம்.பிறர் வளர்ச்சிக்கு உதவுவதைத் தம் வாழ்நாளாகக் கொண்ட உயர் மாந்தர்,வாய்ப்புக்கு ஏற்ப உதவுவோர்,கால,இட நெருக்கடியால் உதவுவோர்,இன்சொல் கூறுவோர்.கடுஞ்சொல் கூறுவோர், அளவே பேசுவோர்,பேச மறுப்போர்,பயனில உதிர்க்கும் பண்பினர், காலந்தாழ்த்திச் செய்வோர், காலத்தே செய்வோர்,காலம் கடந்தும் செய்யாது இருப்போர்,காலம் கடந்தும் செயலால் வாழ்வோர் எனப் பன்முகச் செயல்மாந்தர்களை நாம் காண்கின்றோம்.இவர்களின் இயல்பறிந்து பழகும்பொழுதே அவர்களுக்கும் நமக்குமான உறவு வளர்பிறையாகும் அல்லது தேயும்.இத்தகு பன்முக வாழ்வியல் மாந்தர்களிடம் நாம் பழகும் சூழல் இயந்திரமயமான உலகில் அன்றாடம் இருந்துகொண்டுதான் உள்ளது.வேக உலகைப் புறுக்கணித்து நாம் தனித்து வாழ்ந்துவிட முடியாது.

நம் இயல்புக்கும் தகுதிக்கும் பொருத்தமான சில வினைகளை ஆற்றும்பொழுது மாந்தர்களின் உளக்குறிப்பு,மனநிலை,விருப்பு,வெறுப்புகள்,கொள்கைகள்,உற்றார் உறவினர் அறிந்து ஆற்ற வேண்டியுள்ளது.அவ்வாறு பன்முகத் தன்மைகளையும் ஆராய்ந்து ஒருவினையை ஆற்றினால்தான் நாம் மேற்கொண்ட செயல் நிறைவேறும்.இல்லையேல் செயல் பாழ்படும். எதிர்ப்பு மேலோங்கும்.வளர்ச்சி வீணாகும்.பகை உணர்வு தோன்றும்.உட்பகை வளரும்.எனவே வினையாற்றுவோர் யாராக இருப்பினும் நல்ல செயல்களில் நாம் ஈடுபட்டாலும் பயனாளியின் இயல்பும்,பண்பும் அறிந்தும் ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

'நன்றாற் றலுள்ளும்' என்றதால் நன்மையே செய்வதாக இருந்தாலும்,நல்லதையே செய்வதாக இருந்தாலும் என்று பொருள்கொள்ள வேண்டும்.'தவறுண்டு' என்றமையால் தவறாக அது போய் முடியும் என்க.'அவரவர் பண்பு' என்றமையால் ஒவ்வொருவருக்கும் பண்பு வேறுபடும் என்று நுட்பமாகப் பதிவு செய்கிறார்.'வினைவகையால் வேறுபடும் மாந்தர் பலர்' என்றும், 'குலத்தின்கண் ஐயப்படும்' என்றும் வேறு இடங்களில் குறளாசான் குறிப்பிடுகின்றமையும் ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கன.

தவத்துறையில் இருக்கும் ஒரு முனிவரைக் காண நேர்ந்தால் வீழ்ந்து வணங்குவதையும், வாய்பொத்தி நிற்பதையும்,முன்னோக்கி நின்று உரையாடிய பின், பின்னோக்கி வருவதையும் விரும்புவர்.அவர் கூறும் அனைத்துக்கும் உடன்பாட்டில் விடை சொல்வதையே விரும்புவர்.ஆம்,அப்படியே ஆகட்டும் என்று உரைப்பதையே விரும்புவர்.

அரசியல் தலைவர்கள் தம் தொண்டர்கள் தம் கட்டுப்பாட்டில் இருப்பதையே விரும்புவர்.வினா எழுப்புவதை எந்த நாளும் விரும்பமாட்டார்கள்.இதனால் பல கட்சிகள் உடைந்த கதையுண்டு. ஆசிரியர்கள் தங்களிடம் பயில்வோர் சித்திரப்பாவையாக இருப்பதை விரும்புவர்.கணவன் மனைவி தம் சொல்லுக்குக் கீழ்ப்படிவதை விரும்புகிறான்.மனைவி தாம் விரும்பும் வண்ணம் கணவன் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறாள்.அதிகாரிகள் தங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் எதிர்த்துப் பேசாதவர்களாகவும் சொல்வதைச் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புபவர்களாகவும் உள்ளனர்.இவை விரும்பும் குணங்கள் என்பதிலும் மரபுகளாக இருக்கின்றன.இந்த மரபுகளை மீறும்பொழுதே உறவில் விரிவு ஏற்படுகின்றன.எனவே சமூகத்தில் காலங்காலமாக இருக்கும் மரபுகளை மீறாமல் இருக்கும் பொழுது சிக்கல்கள் தோன்றாமல் இருப்பதால் மரபுகளை அறிவது தேவையாக உள்ளது.எனவே வினாயாற்றும் பொழுது மரபறிதலும் பண்பறிதலும் தேவையாக உள்ளது.பண்பு, மரபு அறியாமல் செய்யும் எந்த வினையும் முற்றுப்பெறுவதில்லை.எனவேதான் ஆளுமை வளர்ச்சியில்,முன்னேற நினைக்கும் மாந்தர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது பன்முகப் பண்புகளை ஏற்றிக் கூறுவர். அக்கூறுகள் முழுமை பெற்றால்தான் வெற்றி ஈட்டும் மாந்தனாக மலரமுடியும்.


ஆளுமை வளர்ச்சியில் பன்முகக்கூறுகள் உண்டென அத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுவது உண்டு.அவையாவன: தோற்றப்பொலிவு,கால மேலாண்மை,இட மேலாண்மை,இன்சொல் கூறல்,உடன்பட்டு மொழிதல், சிறப்பினைப் பேசல்,குறைகளைச் சுட்டாமை,மரபறிதல் என்பன அக்கூறுகளுள் சிலவாம்."பிறர் பிறர் சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து" என்பார் குமரகுருபரர்.

இன்றைய ஆளுமை வளர்ச்சித்துறைக்கு உகந்தனவான 'அவரவர் பண்பறியும்' குணத்தைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பதிவு செய்துள்ளமை வியப்பளிக்கின்றது. உலகியல் மாந்தர்களுடன் பல நாளும் பழகிய பின்னரே இது போன்ற பட்டறிவுகள் வள்ளுவருக்குத் தோன்றியிருக்கக்கூடும்.எனவே பிறரின் பண்பறிந்து பழகிய திருவள்ளுவர் வழியில் நாமும் பழகி உலகியல் சிக்கலில் சிக்காமல் இருப்போம்.வாழ்வை வளமாக்ககிக் கொள்வோம்.உள்ளத்தில் அமைதி நிலவ இந்தக் குறட்பா உதவும் என்றும் பண்பால் வேறுபட்ட மக்களே உலகில் மிகுதி என்றும் முடிவுக்கு வருவோம்.

அந்தமான் திருக்குறள் கருத்தரங்க மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை(நவம்பர் 2009)

Read more...

தோட்டக்கலை அறிஞர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள்

>> வியாழன், 12 நவம்பர், 2009


முனைவர் ச.சம்பந்தமூர்த்தி

தோட்டக்கலை அறிஞர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 1936 அக்டோபர் 11 இல் பிறந்தவர்.பெற்றோர் ந.சதாசிவம், சானகி அம்மாள். தொடக்கக் கல்வியைப் பொன்பரப்பியில் முடித்த இவர் பெண்ணாடத்தில் உயர்நிலைக்கல்வி பயின்றவர். திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் இடைநிலை வகுப்பு(இண்டர்மீடியட்) முடித்தவர்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையில் முதுநிலை வரை பயின்றவர்.தம் பணிக்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வைக் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்தவர்.”நிலசம்பங்கியில் சடுதி மாற்றம்” என்பது இவர்தம் ஆய்வுத்தலைப்பாகும்.38 ஆண்டுகள் தோட்டக்கலைத்துறையில் பணிபுரிந்த பட்டறிவு உடையவர்.தோட்டக்கலைக் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

பல முறை வெளிநாடுகளுக்கு ஆய்வின் பொருட்டு சென்று வந்த பட்டறிவு உடையவர். அவ்வகையில் செர்மனி,இங்கிலாந்து, ஆத்திரேலியா,இசுரேல், இத்தாலி,ஆலந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தவர்.வீட்டினுள் தோட்டம்,உடல்நலம் உங்கள் கையில் என்ற தலைப்பில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன.

உடல் நலம் உங்கள் கையில் நூல் முகப்பு

இந்தியாவின் மிகப்பெரிய உரோசாத்தோட்டமான உதகை உரோசாத் தோட்டத்தை உருவாக்கியவர்.

ஆறு மாதத்தில் காய்க்கக்கூடிய செடிமுருங்கை(பெரியகுளம்1) என்ற இரகத்தை உருவாக்கியவர்.இதன் மூலம் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகம், ஒரிசா உள்ளிட்ட மாநில உழவர்கள் இந்த இரகத்தைப் பயன்படுத்திப் பயன்பெற்றுள்ளனர்.

ஒட்டுப்புளி(பெரியகுளம் 1) என்னும் புளி இரகத்தை உருவாக்கியவர்.இது நான்காண்டுகளுக்குள் காய்ப்புக்கு வந்துவிடும்.


மலரியல் துறை,மூலிகைப் பயிர்த் துறையில் நல்ல ஈடுபாடு உடையவர்.
மலர்களிலிருந்து வாசனைப் பொருள் தயாரிக்கும் தொழில் பெருகுவதற்குப் பெரிதும் உதவி செய்தவர்.

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியின் உருவாக்கத்திற்கு இவரின் பங்களிப்பு மிகுதி. மக்கள் தொலைக்காட்சியில் வேளாண் நிகழ்ச்சிகளை இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பாளராக இருந்து நடத்தியவர்.

விவசாய முன்னேற்றத்திற்காக அமைக்கப்பெற்ற அரசின் பல்வேறு மேல்நிலைக் குழுக்களில் இடம்பெற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர்.

பயிற்றுவித்தலிலும் ஆய்விலும் பணிக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் தற்பொழுது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.

முனைவர் ச.சம்பந்தமூர்த்தி
40,நான்காவது குறுக்குச்சாலை,
இரண்டாம் முதன்மைத்தெரு,
மூகாம்பிகை நகர்,
புதுச்சேரி-605 004
செல்பேசி: 9443254543

Read more...

இணைப்புகள்


Thiratti.com Tamil Blog Aggregator
More than a Blog Aggregator
free hit counter

W3 Tamil

மீள்பிரசுரம்: இத்தளத்தில் பதிவிடப்படும் கட்டுரையை மீள்பிரசுரம் செய்ய விரும்புபவர்கள், இத்தளத்தின் பெயரைக் குறிப்பிடவும்.